ஏழை மாணவன் கல்வி கற்க ரூ.50,000 கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ்
கரூர்: ஏழை மாணவன் கல்வி கற்க அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் தனது 13வது மாத சம்பளத் தொகையான ரூ.50,000த்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் சணப்பிரட்டி எஸ்.வெள்ளாப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த சிதம்பரம்(லேட்) என்பவரது மகன் மணிகண்டன்(17). அவரது தந்தை சிதம்பரம் இறந்து விட்ட நிலையில், கட்டிட தொழிலாளியான அவரது தாய் லதாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார். மணிகண்டன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 480 மதிப்பெண் பெற்று பலரது புருவத்தையும் உயர வைத்தார்.
இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1ல் சேர்ந்தார். சமீபத்தில் வெளியான ப்ளஸ் 2 தேர்வில் மணிகண்டன் 1,188 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். அவர் இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவம் படிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மணிகண்டனின் வறுமையை அகற்றவும், அவரது கல்விக்கு கை கொடுக்கவும் (கரூர் மாவட்டம்) கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் அவரது 13வது மாத சம்பளத் தொகையான ரூ. 50,000த்தை அந்த மாணவனின் மருத்துவ படிப்பு செலவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். காமராஜ் தனக்கு கிடைத்த 12 மாத சம்பளத்தை சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு வழங்கி உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ. காமராஜின் இந்த செயல்பாடு அவருக்கு மட்டும் இன்றி கரூர் மாவட்டத்திற்கும், அதிமுகவுக்கும் பெருமை சேர்த்துள்ளது.