உரவிலையை உயர்த்தி விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விவசாயிகள் தங்களுடைய வயலுக்கு பயன்படுத்துகின்ற ரசாயன உரவிலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. 50 கிலோ எடையுள்ள டி.ஏ.பி. உரம் 2009ல் 486 ரூபாய்க்கும், 2010ல் 507 ரூபாய்க்கும், 2011ல் 643 ரூபாய்க்கும், தற்போது 2012ல் 1250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இதேபோல் 50 கிலோ எடையுள்ள கலப்பு உரம் 2009ல் 316 ரூபாய்க்கும், 2010ல் 347 ரூபாய்க்கும், 2011ல் 476 ரூபாய்க்கும், தற்போது 857 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 50 கிலோ எடையுள்ள பொட்டாஷ் உரம் 2009ல் 206 ரூபாய்க்கும், 2010ல் 219 ரூபாய்க்கும், 2011ல் 299 ரூபாய்க்கும், தற்போது 840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
உரத்தின் விலை ஒரே ஆண்டில் 100 முதல் 200 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ள செயல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப்பட்டுள்ள செயலாகும். இதற்கு வன்மையானக் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர்த்தப்பட்ட உரவிலையை 2009ம் ஆண்டுடைய நிலைக்கு குறைக்க வேண்டும். அவ்வாறு குறைக்க மத்திய அரசு முன்வரவில்லை என்றால் உயர்த்தப்பட்ட விலையை மானியமாகமாவது விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.