இதெல்லாம் நல்லா இல்லை ... மமதா மீது காங். கடும் கோபம்!
டெல்லி: சோனியாவிடம் பேசி விட்டுச் சென்ற கையோடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டதால் மமதா பானர்ஜி மீது செம கடுப்பில் உள்ளது காங்கிரஸ்.
படு கமுக்கமாக போய்க் கொண்டிருந்த விஷயத்தை படாரென்று தேங்காயைப் போட்டு உடைப்பது போல மமதா உடைத்து விட்டுப் போனதால் காங்கிரஸ் கடுப்பில் உள்ளது. பிரணாப் முகர்ஜியா, மன்மோகன் சிங்கா, ஹமீத் அன்சாரியா, கரண் சிங்கா என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் நிறுத்தப் போகும் வேட்பாளர் குறித்து பூடகமாகவே எல்லாம் போய்க் கொண்டிருந்த நிலையில் நேற்று நல்லி எலும்பை கடிப்பது போல நறுக்கென்று இவர்களைத்தான் காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து வைத்துள்ளது என்று பட்டென்று போட்டு உடைத்து விட்டார் மமதா.
காங்கிரஸின் முதல் சாய்ஸ் பிரணாப் முகர்ஜி, 2வது சாய்ஸ் ஹமீத் அன்சாரி என்று அவர் சொல்லப் போக, காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியாகி விட்டது.
அதை விட அதிர்ச்சியாக, இவர்களை ஏற்க முடியாது, நாங்கள் சொல்வதைக் கேளுங்க என்று கூறி 3 புதிய வேட்பாளர்களை மமதாவும், முலாயமும் சேர்ந்து கூறியதால் காங்கிரஸின் அதிர்ச்சி கோபமாக மாறியது.
மமதாவின் செயல் கூட்டணி தர்மத்திற்கு எதிரானது, உள்ளே நடந்த பேச்சுவார்த்தை விவரத்தை இவர் இப்படி பகிரங்கமாக தெரிவித்தது தவறான செயல், வேண்டும் என்றே இப்படிச் செய்துள்ளார் மமதா என்று காங்கிரஸார் கொதிக்கின்றனர்.
ஏற்கனவே ஏகப்பட்ட குடைச்சலைக் கொடுத்து வருபவர் மமதா. மத்திய அரசின் பல திட்டங்களையும் தனது பிடிவாதத்தாலும், எதிர்ப்பாலும், மிரட்டலாலும் அவர் தடுத்து வைத்துள்ளார். இதனால் ஏற்கனவே பிரதமரும் மமதா மீது அதிருப்தியுடன்தான் இருந்து வருகிறார். ஆனால் அவர் சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள். இப்போது சோனியா காந்தியையே கடும் டென்ஷனுக்குள்ளாக்கி விட்டார் மமதா என்பதால் காங்கிரஸார் கடும் கோபத்துடன் உள்ளனர்.
ஆனா என்ன செய்வது, மமதாவை சகித்துக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தியாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு, எனவே எதுவும் செய்யாமல் மறப்போம், மன்னிப்போம் என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.