நித்தியானந்தா மீது மேலும் பல வழக்குகளைப் போடப் போகிறோம்-கர்நாடக அமைச்சர்
பெங்களூர்: நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த சோதனைகளில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் மேலும் பல வழக்குகளை அவர் மீது போடுவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று கர்நாடக போலீஸ் அமைச்சர் அசோக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ராம்நகர மாவட்ட கலெக்டர் ஸ்ரீராம ரெட்டி மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் அனுப் அகர்வால் வழிகாட்டுதலின்கீழ் நித்தியானந்தா ஆசிரமத்தில் சோதனை நடைபெற்றுவருகிறது. இதில், ஏராளமான பெருட்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன. அங்கு கைப்பற்றப்படும் பொருட்களின் அடிப்படையில் நித்தியானந்தாவுக்கு எதிராக மேலும் பல வழக்குகளை பதிவு செய்வது குறித்து அரசு முடிவு செய்யும்.
ஆசிரமத்தால் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா, வேறு ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஆசிரமவாசிகள் ஈடுபட்டனரா என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது.
தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தை நித்தியானந்தா அணுகியுள்ளார். நீதிமன்றத்தில் அரசு தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும். உண்மை நிலவரத்தை கோர்ட்டில் தெரிவிப்போம்.
நித்யானந்தா ஆசிரமத்தில் போதை மருந்துகளும், ஆபாச சிடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து தற்போதைய சூழ்நிலையில் கருத்து தெரிவிக்க முடியாது. சோதனை முடிந்தபிறகு முழுவிவரத்தையும் அரசு வெளியிடும் என்றார் அசோக்.












Click it and Unblock the Notifications