நாளை பாஜக கூட்டணி ஆலோசனை- ஜெ.வை சந்தித்த அத்வானி அறிவிப்பு
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக தேசிய ஜனநாயகக்க் கூட்டணியின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயககக் கூட்டணியானது குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்பது குறித்து சிலரது பெயரை பரிசீலித்து வருகிறது. அது பற்றி இன்று ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன்.
ஏற்கெனவே சங்மாவை ஜெயலலைதா அறிவித்திருக்கிறார். அது பற்றி என்னிடமும் பேசினார். சங்மாவும் என்னை சந்தித்தார். சங்மாவுக்கு ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்படும். ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் போல முரண்பாடு நிறைந்ததாக கூட்டணியின் முடிவு இருக்காது. தெளிவான முடிவு நாளை எடுக்கப்பட்ட பிறகு அது தொடர்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வோம். அதுபற்றி ஜெயலலிதாவிடமும் பேசுவோம் என்றார் அவர்.