ஜனாதிபதி தேர்தல்: ராகுகாலம் தொடங்கும் முன் ஜெ.வுடன் ஆலோசனை நடத்திய அத்வானி!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 1.25க்கு இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
வெங்கய்ய நாயுடு தலைமையிலான உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் அத்வானி நேற்று சென்னை வந்தார். இன்று கல்பாக்கம் அணு உலையைப் பார்வையிட நிலைக்குழுவுடன் சென்றிருந்தார். அப்போது ஜெயலலிதா தரப்பில் ஒரு முக்கிய தகவல் அத்வானிக்குத் தெரிவிக்கப்பட்டது.
ராகுகாலம்
அதாவது இன்று ராகுகாலம் என்பது பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை. அதனால் 1.30 மணிக்கு முன்பாக கோட்டைக்கு வந்துவிட்டால் சந்திக்கலாம். இல்லையெனில் மாலை 3 மணிக்கு மேல் சந்திக்கலாம் என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டது. இதனால் அத்வானி எத்தனை மணிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு செய்தியாளர்களிடம் இருந்தது. ஒருவழியாக அத்வானியும் ராகுகாலம் தொடங்குவதற்கு முன்பாக பிற்பகல் 1.25 மணிவாக்கில் கோட்டைக்கு வந்து சேர சந்திப்பும் நடைபெற்றது.
அப்போது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக டெல்லியில் நடக்கும் பாஜக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ஜெயலலிதாவுக்கு அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார்.