சென்னையில் அத்வானி- வெங்கைய்யா நாயுடுவை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழு
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சென்னைக்கு வருகை தந்துள்ளது.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணுமின் நிலையம், மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனம் (சி.பி.சி.எல்.), சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்தாக உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சென்னை வந்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையிலான இக்குழுவில் அத்வானி உள்பட 10 எம்.பி.க்கள், 4 மாநிலங்களவைச் செயலக அதிகாரிகள், 5 உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னைக்கு நேற்று இரவு வந்த இக்குழுவினர் இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக கல்பாக்கம் சென்று ஆய்வு நடத்துகின்றனர். அதன் பின்னர் மணலி சி.பி.சி.எல். சென்னை துறைமுகம் ஆகிய இடங்களையும் இன்று நாளையும் ஆய்வு செய்கின்றனர்.
இருப்பினும் பாதுகாப்பு காரணங்களால் மணலி சி.பி.சி.எல். சென்னை துறைமுகம் ஆகிய இடங்களுக்கு அத்வானி செல்வதை உறுதியாகக் கூற இயலாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்வானி யாத்திரைய் மேற்கொண்டு தமிழகம் வந்த போது திருமங்கலம் அருகே அவர் சென்ற பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததால் இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.