பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க பாஜக கூட்டணி முடிவு?
இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தனக்கெனி தனி பலம் இல்லாத காரணத்தால், காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரை ஏற்றுக் கொண்டு, துணைக் குடியரசுத்தலைவர் பதவியை மட்டும் வாங்கிக் கொண்டு செட்டிலாகி விடும் மன நிலையில்தான் ஆரம்பத்திலிருந்தே பாஜக கவனமாக உள்ளது. எனவே பிரணாப் முகர்ஜியை அவர்கள் ஆதரிக்கும் முடிவை எடுத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
அத்வானி வீட்டில் இன்று தேசிய ஜனநாயகக்கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் அறிவிக்கவுள்ள பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதா அல்லது மமதா அறிவித்துள்ள அப்துல் கலாமை ஏற்பதா என்றுதான் முக்கியமாக ஆலோசனை நடந்துள்ளது. அப்படி இல்லை என்று அத்வானி பேட்டியளித்திருந்தாலும் கூட அதுதான் நடந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் அப்துல்கலாமை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். அதேசமயம், ஐக்கிய ஜனதாதளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் அப்துல் கலாமுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறார்கள்.
அதேசமயம், பாஜக தரப்பில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற கருத்து எழுப்பப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து முறைப்படி தங்களை அணுகினால் நமது ஆதரவைத் தெரிவிக்கலாம் என்று பாஜக தலைவர்கள் சிலர் யோசனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இன்று மாலையில் நடைபெறவுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்திற்குப் பின்னர் பிரணாப் முகர்ஜியின் பெயரை அறிவிக்கவுள்ளனர். அதன் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் மீண்டும் கூடி தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்து அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.