புளியங்குடி மலையில் 3வது நாளாக எரியும் காட்டுத் தீ: போராடும் வனத்துறை
புளியங்குடி: புளியங்குடி மலைப்பகுதியில் 3வது நாளாக எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் மற்ற பீட்டுகளுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோட்டைமலை பீ்ட் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத் தீ பரவியது. இது குறித்து பழங்குடியின மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் 4 மணி நேரம் தாமதமாகவே வந்ததால் அதற்குள் தீ மளமளவென பரவி 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலை உச்சி வரை கொளுந்துவிட்டு எரிந்தது.
பலத்த காற்று வீசுவதால் தீயின் வேகம் அதிகரித்து சோலை காட்டிலும், அடர்ந்த வனப்பகுதியிலும் உள்ள தேக்கு, ஈட்டி, வேங்கை உள்ளிட்ட மரங்கள் எரிந்து வருகின்றன. இரண்டு பள்ளத்தாக்கு பகுதியில் தீ எரிவதால் அங்குள்ள மான், எறுமை, யானை, கரடி, மிளா உள்ளிட்ட வன விலங்குகள் தீயில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடி வருகின்றனர். தீயை கட்டுப்படுத்த முடியாததற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்காததே காரணம் என கூறப்படுகிறது. இன்று தொடர்ந்து 3வது நாளாக தீ எரிந்து வருகிறது.
தொடர்ந்து 3வது நாளாக இன்று பலத்த காற்று வீசுவதால் அங்குள்ள புளியங்குடி, செல்லுபுளி பீட்களிலும் காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மற்ற வனச்சரகங்களில் உள்ள வன ஊழியர்கள், மற்றும் தீ தடுப்புகாவலர்களைக் கொண்டு தீ தடுபபுகோடுகள் அமைத்தும், மற்ற பீட் பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தால் தான் தீயை அணைக்க முடியும் என தெரிகிறது.