மதுரை திமுக செயலாளர் தளபதிக்கு மீண்டும் காப்பு..ஜாமீனில் வந்த 2வது நாளே கைது
மதுரை: மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும்,மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவருமான கோ.தளபதி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் விடுதலையான 2வது நாளே அவரைக் கைது செய்து விட்டனர்.
மதுரையில் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரின்பேரில் தளபதி உள்ளிட்ட 5 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தளபதி ஏற்கனவே ஒரு நில அபகரிப்பு வழக்கில்தான் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்து விடுவிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சனிக்கிழமைதான் வெளியே வந்தார். ஆனால் நேற்று மறுபடியும் தூக்கி விட்டனர்.
மதுரை நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை கையொப்பமிட வந்த தளபதி உள்ளிட்ட 4 பேரையும் மீண்டும் போலீஸார் கைது செய்து கூட்டிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து விளக்கிய மதுரை புறநகர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் கூறுகையில்,
மதுரை ஸ்ரீ மீனாட்சி மில்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 161 குடியிருப்புகள் கட்டுவதற்காக, தனியாரிடமிருந்து 9 ஏக்கரும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து 14 ஏக்கரும் பெறப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் விளையாட்டு மைதானம், பள்ளிக் கூடம், ஜிம், ஆகியவற்றுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
அரசிடமிருந்து பெறப்பட்ட நிலத்தில் எவ்வித மாற்றம் செய்தாலும், அரசின் அனுமதி பெறவேண்டும். ஆனால், நிலம் தொடர்பாக புகார்கள் எழுந்ததால், அரசு உச்ச வரம்புச் சட்டப்படி நிலத்தை கையகப்படுத்திட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, பொது பயன்பாட்டிற்கான நிலத்தை ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை செயல்படுத்தப்படாதது தெரியவந்தது.
இந்நிலையில், மில் நிறுவனம் நலிவடைந்ததையடுத்து, 1995-ல் இருந்து ஜிஎச்சிஎல் எனும் நிறுவனம், தனது பொறுப்பில் குடியிருப்பு நிலத்தை எடுத்துக் கொண்டது. இந் நிறுவன இயக்குநர்கள் ஆர்.எஸ்.ஜான், சிவபாலசுப்பிரமணியன், நிதிப் பிரிவு மேலாளர் சீனிவாசன், பொதுமேலாளர் மலையரசன் ஆகியோர் மேற்படி நிலத்துக்கு சீனிவாசன், நீரஜ் ஜலான் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணம் (பவர்) அளித்துள்ளனர்.
இதைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலமாக, 3 ஏக்கர் 83 சென்ட் நிலத்தை, ஜாட் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சீனிவாசன் விற்பனை செய்துள்ளார். இந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக, முன்னாள் எம்எல்ஏ தளபதி மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் உள்ளனர்.
அந்த இடத்தை 87 மனைகளைப் பிரித்து ஊராட்சியின் அனுமதியைப் பெறாமல் ஒரு சென்ட் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை, தொழிலாளர் அல்லாத வெளிநபர்களுக்கு விற்றுள்ளனர். மேலும், தளபதியின் உறவினரான வெங்கடேசன் 72 சென்ட் நிலத்தை அரசு அனுமதியின்றி நிபந்தனைகளை மீறி, கிரையம் செய்ததுடன் பலருக்கும் விற்றுள்ளார்.
மேலும் தளபதியும், ஆறுமுகசாமியும் பூங்காவுக்கான 34 சென்ட் இடத்தை தங்கள் உறவினரான கிருஷ்ணசாமி என்பவருக்கு 2008-ல் பவர் எழுதித் தந்துள்ளனர். பவர் பெற்ற 3 நாள்களில், அதை தளபதியின் மனைவி வீரலெட்சுமிக்கு ரூ.14.95 லட்சத்துக்கு கிருஷ்ணசாமி கிரையம் செய்து கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பூங்கா இடத்தை 94 பிளாட்டுகளாக பிரித்த நிலையில் 7 பிளாட்டுகளுக்கு மட்டும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி பெற்று, வீரலெட்சுமி பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஸ்ரீ மீனாட்சி மில்ஸ் நிறுவன முன்னாள் பணியாளர்கள் நலசங்க உதவி செயலர் பலராமன் அளித்த புகாரின் பேரில் தளபதி, ஜிஎச்சிஎல் பொதுமேலாளர் மலையரசன், வெங்கடேசன், ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணபாண்டி ஆகிய 5 பேரும் நிலப்பறிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
கைதான அனைவரும் தற்போது மீண்டும் சிறைக்குள் போய் விட்டனர். ஜாமீனில் வெளியான 2 வது நாளே தளபதி சிறைக்குப் போய் விட்டதால் மதுரை திமுகவினர் ஆடிப் போயுள்ளனர்.