வகுப்பறையில் பேசியதற்காக மாணவி வாயில் பிளாஸ்திரி ஒட்டி பட்டினி போட்ட பள்ளி
ஹைதராபாத்: ஹைதராபாத் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் பேசியதற்காக 9ம் வகுப்பு மாணவியின் வாயில் பிள்ஸ்திரி ஒட்டி அவரை மதிய உணவு சாப்பிடவிடாமல் பட்டினி போட்டுள்ளனர்.
ஹைதராபாத் நூர்கான் பஜாரில் உள்ள சாம் பிரிட்டிஷ் உயர் நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிப்பவர் செய்யது சதாப் பாத்திமா(14). நேற்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியை அப்ரோஸ் மசார் ரவுண்ட்ஸ் வந்தார். அப்போது வகுப்பறையில் சதாப் பாத்திமா சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். வகுப்பு நேரத்தில் அவர் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த அப்ரோஸ் ஆத்திரம் அடைந்தார்.
உடனே பேசியதற்கு தண்டனையாக சதாபின் வாயில் பிளாஸ்திரி ஒட்டுமாறு வகுப்பாசிரியர் சாஜிதா பேகத்திற்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி சதாப் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அவரது வாயில் இருந்த பிளாஸ்திரியை அகற்ற அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் மதிய உணவு சாப்பிடாமல் பட்டினியாகக் கிடந்தார்.
பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற சதாப் பள்ளியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கூறி கதறி அழுதார். இதையடுத்து அவரது தந்தை செய்யது முஸ்தபா இது குறித்து தபீர்புரா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் வழ்ககுப் பதிவு செய்த போலீசார் தலைமை ஆசிரியை அப்ரோஸை கைது செய்தனர். ஆனால் அப்படி எந்த தண்டனையும் கொடுக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து அப்ரோஸ் கூறுகையில், இது தவறான புகார். சதாபின் தந்தை தான் எங்களை மிரட்டினார். பள்ளியை மூடிவிடுவோம் என்று அவர்கள் மிரட்டினார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications