சத்தீஸ்கர்: சி.ஆர்.பி.எப். தேடுதல் நடவடிக்கையில் 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
தண்டேவடா : சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதி மாவோயிஸ்டுகளின் மிகவும் வலுவான கோட்டைப் பகுதி. இப்பகுதியில்தான் சி.ஆர்.பி.எப். ராணுவத்தினர் மீது மாவோயிஸ்டுகள் பல அதிரடித் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரை உயிரிழக்கச் செய்துள்ளனர்.
இப்பகுதியில் அண்மைக்காலமாக சி.ஆர்.பி.எப். படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜசகுடா மற்றும் சிந்தல்நார் வனப்பகுதிகளிலிருந்து இரு பிரிவாக 200க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். படையினர் இன்று அதிகாலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இருவேறு திசைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதல் நடவடிக்கையின் போது மொத்தம் 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு மாவோயிஸ்டுகள் படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கையின்போது 6 சி.ஆர்.பி.எப். படையினர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த படையினர் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.மாவோயிஸ்டுகள் தரப்பில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications