கட்சி துரகோகிகளை பட்டியலிட்டு கொன்ற விவகாரம்: மாஜி சிபிஎம் நிர்வாகி மணி விரைவில் கைது?
திருவனந்தபுரம்: கட்சி துரோகிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி பட்டியலிட்டு கொலை செய்தது என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் இடுக்கி மாவட்ட முன்னாள் செயலாளர் மணி விரைவில் கைதாவார் என்று தெரிகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருந்தவர் மணி. கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் கட்சி துரோகிகள் எப்படி பட்டியலிட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பதை தெரிவித்தார். 13 பேரை கொலை செய்ய பட்டியல் போட்டு அதில் 3 பேரை கொன்றுள்ளதாக அவர் கூறினார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து மணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சதிஷ் சந்திரன் முன்னிலையில் விசாரணைககு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கூறுகையில், மணியின் பேச்சு மனசாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், வாழ்வதற்கான உரிமையை தடுக்கும் வகையிலும் உள்ளது. எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்ததில் எந்த தவறும் இல்லை. அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்றார்.
இதையடுத்து மணியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் கேரள போலீசார் இறங்கியுள்ளனர்.