சரப்ஜித் சிங்கை விடுவிக்க சர்தாரிக்கு சல்மான் கான் கோரிக்கை

1990ம் ஆண்டு பாகிஸ்தானில் 14 பேர் பலியான 2 வெடிகுண்டு தாக்கதல்களில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியரான சரப்ஜித் சிங்கை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தனர். பின்னர் பாகிஸ்தான் ராணுவச் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் தான் உள்ளார். இந்நிலையில் சுர்ஜித் சிங் என்பவரை விடுதலை செய்கிறோம் என்று அறிவிப்பதற்கு பதிலாக சரப்ஜித் சிங்கை விடுவிக்கப் போகிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த குழப்பம் தீர்ந்து சுர்ஜித் சிங் விடுதலையாகி தனது குடும்பத்தாருடன் சேர்ந்துவிட்டார். ஆனால் சரப்ஜித் கதி தான் என்னவென்று தெரியவில்லை. சுர்ஜித் சிங் விடுதலையானதை அடுத்து சரப்ஜித் சிங்கை விடுவிக்குமாறு பாகிஸ்தான் அரசை இந்திய மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அவருக்காக கடவுளிடம் வேண்டுகின்றனர். இந்நிலையில் சரப்ஜித் சிங்கை விடுவிக்குமாறு பாலிவுட் நடிகர் சல்மான் கான் பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சரப்ஜித் சிங்கை விடுவிக்க பாகிஸ்தான் மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாகிஸ்தான் ஊடகம், அரசு, அதிபர் சர்தாரி ஆகியோருக்கு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறேன். சரப்ஜித் சிங்கை விடுவித்து அந்த குடும்பம் சந்தோஷமாக இருக்க உதவுங்கள். நீங்கள் எனக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளுங்கள்.
சரப்ஜித் சிங் சகோதரியின் புகைப்படத்தைப் பார்த்து வருத்தமாக இருந்தது. சரப்ஜித் சிங்கை பஞ்சாபில் உள்ள அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்குமாறு பாகிஸ்தானில் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications