குடிசைக்கு தீ வைத்த வழக்கில் மாஜி பஞ்சாயத்து தலைவர் கைது
நெல்லை: நெல்லையில் குடிசைக்கு தீ வைத்த வழக்கில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள பனையன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். ஆழ்வார்நேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். அவரது மனைவி பூர்ணவள்ளி. அவரும் ஆழ்வார்நேரி பஞ்சாயத்தில் இருமுறை தலைவராக இருந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது அதே ஊரைச் சேர்ந்த மேத்யூ மகாலிங்கம் என்பவர் அவர்களுக்கு எதிராக செயல்பட்டாராம். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் முருகேசனும், மேத்யூவும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
இந்நிலையில் மேத்யூ புதுவீடு கட்டி வருகிறார். இதனால் குடிசை அமைத்து விட்டு அங்கு சாமான்கள் வைத்திருந்தார். மேத்யூ கடந்த 18ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது அவரது குடிசை தீப்பிடித்து எரிந்து அங்கிருந்த ரூ.15,000 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து மேத்யூ மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் எஸ்.ஐ. சுப்பிரமணியன் விசாரணை நடத்தியதில் மேத்யூ குடிசைக்கு தீ வைத்தது முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் என தெரிய வந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்தனர்.