குடியரசுத் தலைவர் தேர்தல்: ஆதரவு திரட்ட நாளை சென்னை வருகிறார் பிரணாப் முகர்ஜி
ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி நாளை முதல் அதிகாரப்பூர்வமாக தமது ஆதரவு திரட்டும் படலத்தை சென்னையில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். நாளை மாலை 4 மனிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரணாப்புக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.
பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து திமுகவின் ஆதரவைக் கோருகிறார். அதன் பின்னர் அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களை பிரணாப் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு இரவு 7.30 மணிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு செல்கிறார் பிரணாப். அங்கு புதுச்சேரி மாநில எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோருகிறார். பினன்ர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.