தீவிரவாதத்தை ஒழிக்க 8 மில்லியன் டாலர் ஒதுக்கீடு: கனடா அறிவிப்பு
நியூயார்க்: தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு 8 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது கனடா. இதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பேர்டு கூறியுள்ளார்.
நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் உலகளவில் தீவிரவாதத்தை எதிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. அதில் பங்கேற்றுப் பேசிய கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பேர்டுஅனைத்து நாடுகளிலும் பரவியிருக்கும் தீவிரவாதத்தை அழிப்பதே இந்தத் தலைமுறைக்கு பெரும் போராட்டமாக உள்ளது.
கனடா அரசு தீவிரவாதத்தைத் தடுக்க எட்டு மில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கிறது. இந்த கூடுதல் நிதி இப்போது நடைமுறையில் உள்ள தீவிரவாத ஒழிப்புப்பயிற்சி அதற்கான கருவிகள், தொழில்நுட்ப உதவி போன்றவை சிறப்புடன் செயல்பட உதவியாக இருக்கும். மேலும் மற்ற நாடுகளின் தீவிரவாதத்தை எதிர்க்கவும் தடுக்கவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இத்தொகை உதவியாக இருக்கும்.
ஐ.நா. தீவிரவாத ஒழிப்பில் உறுதியாக நிற்பது பாராட்டுக்குரியது. பல பிரச்னைகளை ஐ.நா, ஜனநாயகப் போக்கில் சமாளிக்க நினைக்கும் போது, சற்று தாமதமாக போவதுண்டு. ஆனால் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மட்டும் தெள்ளத் தெளிவான நடைமுறைகளை ஐ.நா. பின்பற்றுகிறது.
பல வேளைகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்கு சாதகமாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஒரு செயலுக்கு மற்றொரு செயலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பத்திரிகைகள் தீவிரவாதத்திற்கும் நியாயம் கற்பித்து அதன் கொடிய தன்மையை மறுத்து எழுதுகின்றன என்று பேசினார்.