17ல் கேரள அரசை கண்டித்து ஈரோட்டில் சர்வ கட்சி சார்பில் உண்ணாவிரதம்
ஈரோடு: கேரள அரசை கண்டித்து வரும் 17ம் தேதி ஈரோட்டில் சர்வ கட்சிகள் சார்பில் உண்ணாவிரத பேராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. கேரள அரசின் இந்த செயலுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கேரள அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்துவது என சர்வ கட்சிகளும், விவசாய சங்கங்களும் முடிவு செய்தன.
அதன்படி இதற்கான ஆலோசனை கூட்டம் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈ.ஆர். குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் திமுக, தேமுதிக, சிபிஐ, பாஜக, சிபிஎம், பெரியார் தி.க, வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரள அரசு அணை கட்டுவதை கண்டித்தும், இப்பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் வரும் 17ம் தேதி ஈரோட்டில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.