சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி
ஹாங்காங்: ஹாங்காங் மீதான சீனாவின் மேலாதிக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இங்கிலாந்தின் காலனியாக150 ஆண்டுகளாக இருந்த ஹாங்காங் 1997 ஜூலை 1-ல் சீனாவுடன் இணைந்தது. அப்போது முதல் ஆண்டுதோறும் ஜூலை 1-ல் ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் பேரணி நடைபெற்று வருகிறது.
மனித உரிமைக்கு ஆதரவாகவும், தாங்கள் முழு சுதந்திரமாக இருக்கிறோம் என்பதை காட்டும் வகையிலும் ஹாங்காங் மக்கள் இந்தப் பேரணியை நடத்தி வந்தனர். ஆனால் நேற்று ஹாங்காங்கி நடத்தப்பட்ட பேரணியானது சீனாவின் மீது ஹாங்காங் மக்களுக்கு உள்ள கோபத்தை வெளிக்காட்டுவதாகவும், ஹாங்காங் வந்துள்ள சீன அதிபர் ஹூ ஜிண்டோவோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகவும் அமைந்தது. ஹாங்காங் முழு ஜனநாயகத்துடன் விளங்க வேண்டும் என்பது பேரணி நடத்தியோரின் கோரிக்கை. கடந்த சில ஆண்டுகளாக ஹாங்காங்கின் பொருளாதார சீர்குலைவின் அதிருப்தியே இந்தப் பேரணி என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே ஹாங்காங்கின் புதிய தலைவராக லியூங் சியூகிங் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவர் சீன கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவும் கலந்து கொண்டார்.