உலக பாரம்பாரிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலை தேர்வு: வன ஆர்வலர்கள் வரவேற்பு
இந்தியாவில் பல்லுயிர் இனப் பெருக்கத்திற்கு பெருமை சேர்க்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. தொடர்ச்சியான பசுமை மாறாக் காடுகளை மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காண முடியும். கடந்த 2011ம் ஆண்டில் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பைச் சேர்ந்த குழுவினர் தமிழகத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் ஆய்வு நடத்தினர். பல அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்களை உள்ளடக்கிய களக்காடு-முன்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் 14 நதிகள் உற்பத்தியாகும் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளை அக்குழுவினர் பார்வையிட்டனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 2,000க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள், 273 வகை பறவைகள், 77 வகை பாலூட்டிகள், ஒட்டுண்ணி தாவரங்கள், 110 வகை வண்ணத்துப்பூச்சிகள், 180 வகை அரிய வகை தாவரங்கள் ஆகியவற்றை ஆய்வுக் குழுவினர் பார்வையிட்டனர். இதையடுத்து குஜராத்தில் தொடங்கி மகராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என 6 மாநிலங்களில் விரிந்து காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையை உலகின் பராம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1,600 கிமீ தொலைவிலான மேற்குத் தொடர்ச்சி மலையில் இமயமலையை விட பழமையான காடுகள் உள்ளன. யுனெஸ்கோ அமைப்பு இதுவரை 700 இடங்களை உலகின் பராம்பரியமான இடமாக அறிவி்த்துள்ளது. இதில் 100 இடங்கள் வனப்பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பை வன ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.