சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால் இளம்பெண் தற்கொலை
நெல்லை: கடையம் அருகே இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வட்டி தொழில் செய்யும் பெண் ஒருவர் தான் பெண் கவுன்சிலர், அதிமுக எம்.எல்.ஏ. ஆதரவாளர் என்று கூறி தன்னை அடிக்கடி சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக அந்த இளம்பெண் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரி்த்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையம் சேர்வைக்காரன்பட்டி மயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் கந்தகுமார். அவரது மனைவி மாலதி.வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று மாலதி திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடு்த்து குடும்பத்தினர் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மாலதி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மாலதி வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், தனது சாவுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் தான் காரணம் என்றும் அவர் அடிக்கடி தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், மேலும் அந்த பெண் தனக்கு அப்பகுதி பெண் கவுன்சிலர் ஒருவரும், அதிமுக எம்.எல்.ஏ. ஒருவரும் ஆதரவாக இருப்பதாகக் கூறி மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அம்பை டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் விசாரணையில் மாலதியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் மேரி என்பதும், அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. அவர் தான் மாலதியை அடிக்கடி சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்.
முன்னதாக இது குறி்த்து மாலதி அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் உதவியுடன் மாலதி மேரி மீது கடையம் போலீசில் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மேரி மாலதியை மிரட்டியதாவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.