சதானந்த கவுடா ராஜினாமா செய்கிறார்.. ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக அறிவிக்கப்படுகிறார்
சுரங்க முறைகேடில் சிக்கிய முன்னாள் முதல்வர் எதியூரப்பா ராஜினாமா செய்ததால் சதானந்த கவுடாவை பாஜக மேலிடம் புதிய முதல்வராக நியமித்தது. இருப்பினும் சிறையில் இருந்து விடுதலையான எதியூரப்பா, தமக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வந்தார். இது பலனளிக்காத நிலையில் தமது லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வலியுறுத்தி வந்தார். மேலும் தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்து வந்தனார். இதனால் நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த பாஜக மேலிடம் முடிவெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் சதானந்த கவுடாவை மாற்ற மூத்த தலைவர் அத்வானி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதனால் முட்டுக்கட்டை நீடித்தது.
இந்நிலையில் சதானந்த கவுடா ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை பாஜக மேலிடம் அறிவிக்கவும் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாஜக முக்கியத் தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து வரும் வாரத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் புதிய முதல்வராக பதவியேற்கக் கூடும் எனத் தெரிகிறது.