மழை வரும் அறிகுறி வானத்தில் தெரியுதே!
ஜூன் மாதத்தில் சராசரியாக நாடு முழுவதும் 233 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், வெறும் 173 மி.மீ மட்டுமே பெய்துள்ளது. இதனால் ஜூன் மாதத்தில் மட்டும் மழையின் தட்டுப்பாடு 63 சதவீதமாகும்.
அதே நேரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மழை அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவது நல்ல விஷயமாகும்.
இதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதுமே மழை பெய்ய ஆரம்பித்துவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளைத் தவிர நாடு முழுவதுமே அடுத்த 2, 3 நாட்களில் மழை பெய்யத் தொடங்கும் என்று கூறுகிறது வானிலை மையம்.
கடந்த மாதம் 1ம் தேதி முதல் கேரளாவில் தொடங்கி தென் கிழக்குப் பருவ மழை பெய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், 4 நாட்கள் தாமதமாக ஜூன் 5ம் தேதி தான் மழையே வந்தது. ஆனாலும், போதிய அளவில் பெய்யவில்லை.
இதனால் காரிப் பருவத்தில் பயிரிடப்படும் நெல், பயறு வகைகளை பயிரிடாமல் விவசாயிகள் வானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது அடுத்த சில நாட்களில் மழை வந்துவிடும் என வானிலை மையத்தின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், பெய்யாத வரை எதுவும் நிச்சயமில்லை என்பதால் கவலையுடனும் உள்ளனர்.
மழை வராததால் நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட 2 மில்லியன் ஹெக்டேர் குறைவாகவே விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். அதே போல பயறு வகைகளும் 3 மில்லியன் ஹெக்டேர் குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தை அடுத்த ஆண்டில் தான் நாம் உணர்வோம். அரிசி, பயறு வகைகளின் விலைகள் வானத்தைத் தொடும்போது தான் கடந்த ஆண்டு மழையில்லாததால் என்ற காரணத்தை மக்கள் அறிவர்.