கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து முறைப்படி இன்று சதானந்த ராஜினாமா- ஆளுநரிடம் கடிதம் கொடுக்கிறார்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து முறைப்படி இன்று சதானந்த கவுடா ராஜினாமா செய்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பரத்வாஜை நேரில் சந்தித்து சதானந்த கவுடா கொடுக்க உள்ளார்.
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை பாஜக தலைவர் நிதின் கத்காரியிடம் சதான்ந்த கவுடா நேற்று கொடுத்திருந்தார். இதையடுத்து புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் அறிவிக்கப்பட்டார். இருப்பினும் முறைப்படியாக தமது ராஜினாமா கடிதத்தை இன்று ஆளுநர் பரத்வாஜிடம் சதானந்த கவுடா நேரில் கொடுக்க உள்ளார்.
இதனிடையே நாளை நடைபெற உள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிட பிரதிநிதிகள் அருண் ஜேட்லி மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதன் பின்னர் புதன்கிழமையன்று ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 3-வது முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.