கர்நாடகத்தில் பாதியிலேயே ஆட்சியை இழந்துடுவிடும் ஒக்கலிகா சமூக முதல்வர்கள்
பெங்களூர்: கர்நாடக அரசியலில் கடந்த அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த பலரும் முதல்வராகி இருந்தாலும் ஒருவர் கூட 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யவில்லை என்பதுதான் விசித்திரம்!
ஹனுமந்தையா, மஞ்சப்பா, தேவ கவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, சதானந்த கவுடா ஆகியோர் கர்நாடகத்தில் முதல்வர் பதவி வகித்த ஒக்கலிகா சமூகத்தினர் ஆவர். இதில் பழைய மைசூர் மாநிலத்தின் முதல்வராக 1952-ம் ஆண்டு மார்ச் 30 முதல் 1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 வரை பொறுப்பு வகித்தவர் ஹனுமந்தையா. கர்நாடக மாநிலம் உருவாக்கப்படுவதற்காக அவர் தமது முதல்வர் பதவியை ராஜினாமாசெய்ய நேரிட்டது. பின்னர் 1962ஆம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 முதல் 1956 அக்டோபர் 31 வரை மஞ்சப்பா முதல்வராக பொறுப்பு வகித்தார். அதன் பின்னர் நிஜலிங்கப்பா பொறுப்பேற்றுக் கொண்டார்.
கர்நாடக மாநிலத்தின் 14-வது முதல்வராக 1994ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தேவ கவுடா பொறுப்பு வகித்தார். அவர் அதன் பின்னர் பிரதமரானார்.
1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் எஸ்.எம். கிருஷ்ணா மாநில முதல்வராக பொறுப்பு வகித்தார். ஆனால் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது.
அதன் பின்னர் 2006-ம் ஆண்டு பிப்ரவரி 4 முதல் 2007-ம் ஆண்டு அக்டோபர் வரை 20 மாத முதல்வராக இருந்தார் ஹெச்.டி. குமாரசாமி.
இந்த வழியில்தான் மாநிலத்தின் 26-வது முதல்வராக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி பொறுப்பேற்ற சதானந்த கவுடா நேற்று தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்து ஒக்கலிகா சமூகத்துக்கு என்ன சாபமோ ஒருவர் கூட ஒருமுறை கூட ஐந்து ஆண்டுகால முதல்வர் பதவியை அனுபவித்த வரலாறு இல்லை!