''கோத்ரா ரயில் எரிப்பு: வாஜ்பாய்- நாராயணன் இடையிலான கடிதங்களை வெளியிட தேவையில்லை''
டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு பிரதமராக இருந்த வாஜ்பாய் மற்றும் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் ஆகியோருக்கு இடையேயான கடிதப் பரிமாற்றங்களை பகிரங்கப்படுத்த முடியாது என்ற மத்திய அரசின் முடிவு சரியானதே என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சி. ரமேஷ் என்பவர் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பின்னர் பிரதமர் வாஜ்பாய்க்கும் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணனுக்கும் இடையேயான கடிதப் பரிமாற்றங்களை கோரியிருந்தார். ஆனால் மத்திய அரசு இந்தக் கடிதப் பரிமாற்றங்களை தர மறுத்துவிட்டது. இதையடுத்து மத்திய தகவல் ஆணையரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டது. ரமேஷின் மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம் கடந்த 2006-ம் ஆண்டு, கடிதப் பரிமாற்றங்களை மனுதாரருக்குக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு செய்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி அனில்குமார், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடைவிதித்தது. மேலும் வாஜ்பாய்- கே.ஆர். நாராயணன் இடையேயான கடிதங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் கருதி வெளியிடத் தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவு சரி என்றும் நீதிபதி தெரிவித்தார். இதேபோல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைக் கோரிய ரமேஷின் மனுவையும் நீதிபதி தள்ளுபை செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications