லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல சுரேஷ் கல்மாடிக்கு நீதிமன்றம் அனுமதி
கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் சுரேஷ் கல்மாடி மற்றும் 10 பேர், ரூ.90 கோடி ஊழலில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் லண்டனில் இந்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல சுரேஷ் கல்மாடி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சர்வதேச தடகள சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில், நான் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை சிறப்பு சி.பி.ஐ நீதிபதி தல்வந்ட் சிங் விசாரித்தார். இதற்கு எதிர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் சுரேஷ் கல்மாடியின் கோரிக்கை ஏற்று ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு அளித்தார்.
இது குறித்து நீதிபதி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,
மனுதாரர் (சுரேஷ் கல்மாடி) சர்வதேச தடகள சங்கத்தின் உறுப்பினர், ஆசிய தடகள சங்கத்தின் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்து வருகிறார். எனவே லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது மேற்கண்ட சங்கங்களின் கூட்டங்களில், சுரேஷ் கல்மாடி கலந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சென்று வர மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.