திருமலையில் கடத்தப்பட்ட குழந்தை.. துப்பு கொடுப்போருக்கு ரூ. 1 லட்சம் பரிசு: திருப்பதி தேவஸ்தானம்
திருமலை: திருமலையில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சென்னை அடையாறைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கடந்த 7-ம் தேதி இரவு திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். பின்னர் விடுதி அறையில் தங்குவதற்கு இடம் கிடைக்காதால் மண்டபத்தில் அனைவரும் படுத்து தூங்கினர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அவர்களின் 8 மாத ஆண் குழந்தை பிரதியூத்தைக் காணவில்லை. குழந்தையை யாரோ குழந்தையை கடத்தி சென்றுவிட்டனர் என்பது தெரியவந்தது.
குழந்தையைக் காணாமல் துடித்த பெற்றோர், இதுபற்றி தேவஸ்தானம் மற்றும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வயர்லெஸ் மூலம் அனைத்து பகுதிக்கும் தகவல் தெரிவித்து குழந்தையை தேடி வருகின்றனர். ஆனால் 5 நாட்களாகியும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் தேவஸ்தான அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த தேவஸ்தான அதிகாரிகள், குழந்தையை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். அத்துடன் குழந்தையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை தருவதாக அறிவித்தனர். மேலும் குழந்தையின் பெற்றோர் திருமலை முழுவதும் சென்று குழந்தையை தேடிப் பார்க்க தனி காரும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சத்ரபதி சிவாஜி டெர்மினல்ஸ் முன்பு மூன்று வயது குழந்தையை கடத்தி சென்ற கடத்தல்காரனை சிசிடிவி கேமாரா மூலம் பிடித்த போலீசார் குழந்தையை மீட்டனர். அதேபோல் திருமலையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தால் குழந்தையை விரைவில் மீட்டிருக்கலாம் என்று பக்தர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து திருமலையில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.