நான் பதவியில் இருக்கும் வரை இலங்கையில் தகவல் உரிமை சட்டம் கிடையாது- ராஜபக்சே
மத்திய அரசு இந்தியாவில் அமல்படுத்தி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து கொழும்பில் நடைபெறும் கருத்தரங்கில் பேசுகிறார் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ். இதற்காக 3 நாள் பயணமாக ஜெயராம் ரமேஷ் நேற்று கொழும்பு புறப்பட்டு சென்றார்.
பண்டாரநாயக சர்வதேச கல்வி மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஜெய்ராம் ரமேஷ், அதிபர் ராஜபட்சவை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது ஜெய்ராம் ரமேஷிடம் ராஜபட்சே கூறியதாவது,
இலங்கையின் கிழக்குப் பகுதியில் சம்பூர் மின் திட்டம் ஆகஸ்டில் செயல்படத் தொடங்கும். இருநாடுகளின் சார்பில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அலுவலகம் திரிகோணமலையில் அமைக்கப்படும்.
அம்பணதோட்டம் அருகே வரவுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை போல இலங்கையிலும் கொண்டு வர விரும்புகிறேன் என்றார்.
இதற்கு பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது, இந்தியாவில் வேலை உறுதியளிப்புத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என்றார்.
ஆனால் இதில் அதிருப்தி அடைந்த ராஜபட்சே, இலங்கையில் நான் ஆட்சியில் இருக்கும் வரை தகவல் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தமாட்டேன் என்றார்.