தாசில்தாரிடம் ரூ.2.5 லட்சம் பறித்த 'போலி' லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது
சேலம்: சேலத்தில் ஓய்வுபெற்ற தாசில்தாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் போல் நடித்து இரண்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது சேலத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். அங்கம்மாள் காலனி நில மோசடி வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் இவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது இவர் ஓய்வுபெற்று விட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரங்கநாதனின் செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு புகார்களில் இருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அவ்வளவு பணத்தை தன்னால் தரமுடியாது என்று கூறிய ரங்கநாதன் இறுதியில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு ரங்கநாதனை வரசொன்ன வாலிபர் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். இதுபற்றி பின்னர் விசாரித்த ரங்கநாதன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதனையடுத்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் சென்னையில் சாந்தோம் பகுதியில் வசித்து வந்த சேலத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான காந்தி என்பவன்தான் பணத்தை பறித்துச்சென்றது தெரியவந்தது. அவனை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டான்.
இதைத் தொடர்ந்து காந்தி மற்றும் அவனது கூட்டாளிகள் மாரியப்பன், கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். இன்று காலையில் வடபழனியில் மாஜிஸ்திரேட்டு ஒருவரின் வீட்டில் அவர்களை ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 3 பேரும் மேலும் பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி விசாரணை நடத்து வதற்காக காந்தியையும், அவனது கூட்டாளிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.