ஜெயலலிதா உத்தரவின் பேரில் வேளச்சேரி ஏரி சீரமைப்பு பணி துவங்கியது
சென்னை: கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் வேளச்சேரி ஏரியை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
வேளச்சேரியில் சுமார் 80 ஏக்கர் பரப்பில் ஏரி அமைந்துள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் உள்ள ஒரே ஏரி இதுதான். ஆனால் இதில் ஆகாய தாமரை வளர்ந்து ஏரி முழுவதும் அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இதையடுத்து ஏரியை குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டும் இடமாக சிலர் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஏரியை ஒட்டிய பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து வேளச்சேரி ஏரியை சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைத்து அதனை சுற்றிலும் நடைப்பாதை, பூங்கா ஆகியவற்றை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் மக்களின் இந்த கோரிக்கை மீது முதல்வர் ஜெயலலிதா தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேளச்சேரியை சீரமைத்து அழகுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து தென்சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிட்லபாக்கம் ராஜேந்திரன் நிதியை ஒதுக்கினார்.
பொதுப் பணித்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் செலவில் ஆகாய தாமரைகள் அகற்றி சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா நேற்று பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் நஞ்சன் தலைமையில் நடந்தது. இந்த பணியை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் துவக்கி வைத்தார்.
ஏரியில் சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படும். அதன்பிறகு ஏரியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு தங்களின் கோரிக்கையை ஏற்று வேளச்சேரி ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.