ஆரம்பிச்சிட்டாரு ஆளுநரு... கர்நாடகத்தில் கறைபடிந்த சிலருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளாக புகார்
பெங்களூர்: கர்நாடகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரவையில் கறைபடிந்த சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது என்று ஆளுநர் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடகத்தில் ஆட்சி நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை தற்போது பதவி ஏற்று உள்ள புதிய அமைச்சரவையில் கூட கறைபடிந்த சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய அமைச்சர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. கறைபடிந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெறக் கூடாது என்று கூறிப் பார்த்தேன். ஆனால் பாஜகவினர் கேட்கவில்லை. அவர்களே அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்துவிட்டனர்.
சதானந்த கவுடா நல்லாட்சி நடத்தியவர். அவரை மாற்றியது மகிழ்ச்சியளிக்கவில்லை. ஜெகதீஷ் ஷெட்டர் முன்பிருந்தவர்கள் செய்த பணியை தொடருவார் என நம்புகிறேன்.
மாதகால ஆட்சி எனக்கு முழு திருப்தியை அளித்து உள்ளது. ஏனென்றால் அவர் சரியானவற்றை சரியான நேரத்தில் செய்து வந்து இருக்கிறார். லோக் அயுக்தாவுக்கு புதிய நீதிபதியை ஜெகதீஷ் ஷெட்டர் நியமித்தாக வேண்டும். இல்லையெனில் நீதிபதியை நியமிக்குமாறு மக்களே கேட்பார்கள். நீதிபதியை நியமிப்பதில் சாதியெல்லாம் பார்க்கக் கூடாது. மாநிலத்தில் தற்போதைய முதன்மைப் பணியாக வறட்சி நிவாரணப் பணிகள்தான் உள்ளன. அதை கவனம் செலுத்துமாறு ஜெகதீஷ் ஷெட்டருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன் என்றார் அவர்