பீகாரில் 4 மாத ஆண் குழந்தையை நேபாள தம்பதிக்கு ரூ.62க்கு விற்ற தாய்
பாட்னா: பீகார் மாநிலத்தில் வறுமையின் கொடுமையை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது 4 மாத ஆண் குழந்தையை வெறும் ரூ.62க்கு விற்றுள்ளார்.
பீகார் மாநிலம், அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷன்னு காத்தூன்(35). வறுமையில் வாடும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கிராமத்தில் இருந்து புறப்பட்டு இந்திய-நேபாள் எல்லையில் உள்ள போர்ப்ஸ்கஞ்சிற்கு சென்றார். அங்குள்ள ரயில் நிலையத்தில் குழந்தைகளுடன் தங்கினார். பின்னர் தனது 4 மாத ஆண் குழந்தையை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.62க்கு விற்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஷன்னுவைப் பிடித்து விசாரித்தபோது தான் குழந்தையை விற்கவில்லை என்றும், வறுமையில் வாடும் தன்னால் அதை சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் ஒரு தம்பதிக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடயை மகள் சபினாவோ(8) தனது தம்பி பாப்பாவை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு தனது அம்மா ரூ.62க்கு விற்றதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளாள்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த செய்யது அஹ்சான் அலி கூறுகையில், ஷன்னு தனது குழந்தையை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கொடுத்துவிட்டார். அவர் அந்த தம்பதியிடம் இருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என்று என்னிடம் தெரிவித்தார் என்றார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.