காங்கயம் அருகே காமராஜர் விழாவுக்குச் சென்ற பள்ளி மாணவி பலி: 9 பேர் படுகாயம்
திருப்பூர்: காங்கயம் அருகே படியூரில் பள்ளி மாணவ மாணவிகள் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் பரிதாபமாகப் பலியானார். மேலும் ஒன்பது மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி கல்வி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி தின விழா கொண்டாட அனைத்து மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது. இந்த விழாவுக்காக படியூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகள் 10 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.
அப்போது ஆட்டோ படியூர் நோக்கி சென்றபோது சாலையில் திருப்பம் ஒன்றில் திரும்புகையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 10 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ஏழாம் வகுப்பு மாணவி மோகனா தேவி (12) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த கார்லின் (13), சிவகார்த்திக் (13), காந்திமதி (13) ஆகிய மூன்று பேர் மேல் சிகிசைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செளமியா (12) என்ற மாணவி திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேலும் கோகுல் (14), சௌந்தர்யா (12), லோகேஸ்வரி (12), அஜீத்குமார் (13), குமார் (12) ஆகிய 5 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், மாவட்ட கலெக்டர் எம்.மதிவாணன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்த மாணவ, மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கந்தம்பாளையம் பகுதியில் இருந்து படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் அங்கிருந்து படியூர், காங்கயம் பகுதிகளுக்குப் பேருந்து வசதி இல்லை என்பதால் தான் அவர்கள் இது போன்ற ஆட்டோக்கள் மூலம் பள்ளி சென்று வருவதாகக் கூறப்படுகின்றது.