சிவகிரி ஜமீன் சொத்து விவகாரத்தில் இண்டர்போல் உதவியை நாடுகிறது சிபிசிஐடி
சென்னை: சிவகிரி ஜமீன் சொத்து விவகாரம் தொடர்பாக இண்டர்போல் உதவியை நாட முடிவு செய்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிவகிரி ஜமீன் வாரிசுதாரர் என்று கூறி என். ஜெகநாதனுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகார கடிதத்தை ரத்து செய்து 2008-ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த அங்கீகார கடிதத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் திருப்பி ஒப்படைக்கவில்லை. அங்கீகார கடிதத்தை ரத்து செய்ததை எதிர்த்து ஜெகநாதன் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களையும் சேர்க்கக் கோரி சிவகிரி ஜமீனின் உண்மையான வாரிசுதாரர்கள் 126 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜெகநாதன் மற்றும் அவரது வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோரிடம் நீதிபதிகள், எதிர்தரப்பினர் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது வழக்கறிஞர் சொக்கலிங்கம், அங்கீகாரக் கடிதம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்று கூறினார். மேலும் வாரிசுதாரர் என்று கூறப்பட்ட ஜெகநாதன் மூலமாக சொத்து விற்பனைக்கு முயற்சி மேற்கொண்டதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான இன்பதுரை, சிவகிரி ஜமீன் சொத்து விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. ஜெகநாதனிடம் இருந்து சிவகிரி ஜமீன் சொத்துகளுக்கு வாரிசு என உரிமை பெற்றுள்ள கசினா அவரது மனைவி மாயா ஆகியோர் தற்போது சுவிட்சர்லாந்தில் இருக்கின்றனர். அவர்களை விசாரிக்க வேண்டியிருக்கிறது. மேலும் சுவிஸ் வங்கி, சிண்டிகேட் வங்கிகளுக்கும் சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் சர்வதேச போலீஸின் உதவியையும் நாட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்றார்.
இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 23-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.