ரயில் பெட்டியின் இரண்டு கதவுகளையும் திறக்க முடியாததால்தான் பலர் உயிரிழப்பு!

அதிகாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூரை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்தலில் தீவிபத்தில் சிக்கியது. இதில் எஸ். 11 பெட்டி முற்றிலும் சிக்கிக் கொண்டது.
அப்போது அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். சிலர் மட்டுமே நெல்லூரில் ரயில் நின்றபோது எழுந்து மீண்டும் படுத்துள்ளனர்.
ரயிலில் முதலில் டாய்டெட் பகுதியில்தான் தீப்பிடித்துக் கொண்டுள்ளது. இது மெதுவாக பெட்டியின் இதர பகுதிகளுக்குப் பரவத் தொடங்கியது. அப்போது முழித்திருந்த சிலர் இதைப் பார்த்து அலறியுள்ளனர். இதையடுத்து விழித்தெழுந்த பயணிகள் அருகாமையில் உள்ள பெட்டிகளுக்கு ஓடியுள்ளனர்.
ஆனால் அப்பர் பெர்த்தில் இருந்தோரால் உடனடியாக வெளியேற முடியவில்லை. மேலும் தீ வேகமாகப் பரவியதோடு கரும்புகையும் சூழ்ந்து கொண்டது.
இதையடுத்து ரயில் பெட்டியின் கதவுகளைத் திறந்து வெளியே குதிக்க பலர் முயன்றுள்ளனர். ஆனால் பெட்டியின் இரு கதவுகளையும் திறக்க முடியவில்லை. அவை ஜாம் ஆகி விட்டன. ஜன்னல் வழியாகவும் குதிக்க முடியாமல் சிலர் அவசர கால கதவைத் திறந்து குதித்துள்ளனர். ஆனால் அதற்குள் ரயில் பெட்டி முழுக்க தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கி விட்டது.
தீவிபத்து ஏற்பட்டபோது மெதுவாகத்தான் தீ எரிந்துள்ளது. அப்போது கதவைத் திறக்க முடிந்திருந்தால் பெரும்பாலானோர் உயிர் தப்பியிருக்க முடியும். ஆனால் கதவைத் திறக்க முடியாமல் போனதால் பலர் சிக்கிக் கொண்டு விட்டனர் என்று தீவிபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சுதிர் என்ற பயணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications