வட இந்தியாவில் ஏற்பட்ட மின் தடை, உலகிலேயே மிகப் பெரியதாம்!
டெல்லி: வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கள், அதாவது பாதி இந்தியா கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்துப் போயுள்ளன. ஒட்டுமொத்த பொருளாதாரமும் இப்பகுதியில் ஸ்தம்பித்துப் போய் விட்டது. ரயில் போக்குவரத்து பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது. 60 கோடி மக்கள் என்னநடக்கிறது என்றே தெரியாமல் தவித்துப் போய் விட்டனர். உலகின் மிக மோசமான மின் தடை என்ற பெயரை இந்த வடக்கு, கிழக்கு இந்திய மின் கிரிடு செயலிழந்த சம்பவம் பெற்று விட்டது.
செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்குத்தான் முதல் மின்தடை ஏற்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து 3 முறை மின்வெட்டு ஏற்பட்டு இந்த 19 மாநிலங்களும் செயலிழந்து போய் நின்றன. அன்று இரவுக்குள் 80 சதவீத மாநிலங்களிலும், டெல்லியிலும் மின்சாரம் மீண்டும் வந்தது.
தெற்கு மற்றும் மேற்கு மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்று இவர்களுக்கு கொடுத்து நிலைமையை சரி செய்தனர் அதிகாரிகள்.
டெல்லி மெட்ரோ ரயில் சேவை பல மணி நேரம் பாதிப்பைச் சந்தித்தது. பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.
மேற்கு வங்கத்தில் அசன்சோல் நிலக்கரி சுரங்கத்திற்குள் 200 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மிகவும் கஷ்டப்பட்டு மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதேபோல ஜார்க்கண்ட்டிலும் 65 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மின்தடையானது உலகிலேயே மிகவும் நீளமான, மோசமான மின்தடைகளில் ஒன்று என்ற பெயரைப் பெற்று விட்டது. இந்த மின்தடையால் ஒட்டுமொத்த வட மாநிலங்களிலும் ஸ்தம்பித்துப் போய் விட்டன.
வடக்கு பிராந்திய மின் கட்டமைப்பு செயலிழந்த சில மணி நேரங்களிலேயே கிழக்கு மற்றும் வட கிழக்கு கட்டமைப்புகளும் செயலிழந்து போயின.
வடக்கு பிராந்திய கட்டமைப்பு செயலிழக்க முக்கியக் காரணமே உ.பி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் கூடுதலாக மின்சாரத்தை உறிஞ்சியதே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மூன்று மாநிலங்களுமே இதை திட்டவட்டமாக மறுத்துள்ளன. ஆனால் உ.பி. மட்டும் கிட்டத்தட்ட முக்கால்வாசி மின்சாரத்தை உறிஞ்சியுள்ளதாக அதிகாரிகள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
இந்த மின் தடை காரணமாக வடக்கில் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உ.பி. ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஏழு வட கிழக்கு மாநிலங்கள் ஸ்தம்பித்துப் போயின.
மீண்டும் இந்த நிலை ஏற்படாது என்று உத்தரவாதம் த்ர முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எந்த மாநிலம் கூடுதலாக மின்சாரத்தை எடுக்காமல் இருப்பதே இதற்கு சரியான, ஒரே தீர்வு என்றும் கூறப்படுகிறது.