சரமாரியாக மின்சாரத்தை 'ஓவராக' எடுத்ததால் வந்த வினைதான் வட மாநில மின் தடை!
கடந்த 3 நாட்களாக வட மாநிலங்களில் கிரிடு பாதிப்பால் மின் தடை ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பெரும் நஷ்டமும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மின்தடையால் நாட்டின் பாதிப் பகுதி ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இந்த நிலைக்கு முக்கியக் காரணம், வட மாநிலங்கள் பல தாறுமாறாக அளவுக்கு மீறி மின்சாரத்தை எடுப்பதுதான் என்று கூறப்படுகிறது. இதில் உ.பி.தான் முன்னணியில் உள்ளது.
பருவ மழை குறைந்து போய் விட்ட காரணத்தால் நீர் மின்சார உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலும் தொடர்ந்து கொளுத்தி வருவதால் மக்களின் மின்சாரப் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் மின்சாரத்தின் தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் வட மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை பெருமளவில் கூடுதலாக எடுக்கப் போய் சப்ளை கிரிடு டிரிப் ஆகி செயலிழந்து போய் விட்டது. இதனால்தான் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 19 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டு அவை இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
வட மாநிலங்களைப் பொருத்தவரை உ.பிதான் இந்த கூடுதல் மின் எடுப்பில் முன்னணியில் உள்ளது. அடுத்த இடத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகியவை உள்ளன.
இதில் உ.பிதான் பெரும் அநியாயம் செய்கிறதாம். தொடர்ந்து பெருமளவிலான மின்சாரத்தை இந்த மாநிலம்தான் தொடர்ந்து எடுத்து வருகிறது. இதையடுத்து இந்த மாநில மின் வாரிய தலைமை பொறியாளருக்கு மத்திய மின்சார முறைமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி டெல்லிக்கு அழைத்துள்ளது.
அதேபோல ஹரியானாவும், பஞ்சாபும் கூட தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட மிகப் பெரிய அளவில் மின்சாரத்தைத் திருடுகின்றனவாம். இவற்றுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உ.பியில், மாயாவதி முதல்வராக இருந்தவரை இந்த அளவுக்கு மின்சாரத்தை திருடவில்லையாம். காரணம், அவர் தனது மாநிலத்திற்குத் தேவையான மின்சாரத்தை சட்டிஸ்கர், குஜராத், மேற்கு கிரிடிலிருந்து பெற்று விநியோகித்துள்ளார். ஆனால் முலாயம் சிங்கின் கட்சி வெற்றி பெற்று அங்கு அவரது மகன் அகிலேஷ் யாதவ் பதவிக்கு வந்தது முதலே வடக்கு கிரிடில் பெருமளவில் கை வைத்து வருகிறார்களாம். இதை மத்திய அரசோ, மத்திய மின்துறை அமைச்சரோ தட்டிக் கேட்காமல் இருந்துள்ளனர். இதனால்தான் தற்போது கிரிடே அடிபட்டுப் போகும் அளவுக்கு கரண்ட்டை உறிஞ்சிக் குடித்துள்ளனர் உ.பி. மாநிலத்தவர்.
உ.பி. மாநில மின்வாரியம் கூடுதலாக எடுத்துள்ள மின்சாரத்தின் அளவு என்ன தெரியுமா... டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் மின்சாரத்தை அவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு திருடி வந்துள்ளனர்.