புனே குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாஹிதீனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள்
புனே: புனேவில் அடுத்தடு்தது 4 இடங்களில் வெடிகுண்டு வெடித்ததன் பின்னணியில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த 1ம் தேதி இரவு அடுத்தடுத்து 4 இடங்களில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் காயம் அடைந்தார். உயிரிழப்பு எதுவுமில்லை. மேலும் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றைய விசாரணையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய கைக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு தான் கைக்கடிகாரத்தை பயன்படுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்யும்.
இது தவிர இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த காதீல் அகமது சித்திகியின் மரணத்திற்கு பழி வாங்குவோம் என்று அந்த அமைப்பினர் கடிதம் அனுப்பியதாக புனே போலீசார் தெரிவித்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்திகி கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததால் போலீசார் 9 சைக்கிள் வினியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் சுஜ்த் தேஷ்முக் என்பவர் கடந்த புதன்கிழமை 3 சைக்கிள்களை விற்பனை செய்துள்ளார். அந்த சைக்கிள்களில் தான் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
போலீசாரிடம் தேஷ்மக் கூறுகையில், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகள் பேசிய இருவர் வந்து சைக்கிள்கள் வாங்கினார்கள் என்றார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் அந்த இருவரின் படத்தை வரைந்துள்ளனர். அவர்களுக்கு 25 முதல் 30 வயது வரை இருக்கும் என்று தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் காயமடைந்த தயானந்த் பாட்டீலிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அவரை குற்றவாளியாக பார்க்காவிட்டாலும், அவரது பைக்குள் எப்படி குண்டுகள் வந்தது என்று விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பாட்டீலின் மனைவி சத்யகலாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அம்மோனியம் நைட்ரேட்டுடன் நியோஜெல் சேர்த்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. குண்டு வெடித்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளில் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று போலீசார் பார்த்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.