ஏர் இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட போயிங் விமான என்ஜின் தீப் பிடித்து எரிந்தது
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் நார்த் சார்லஸ்டன் நகரில் உள்ள போயிங் தொழிற்சாலையில் தான் ட்ரீம்லைனர் 787 விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தத் தொழிற்சாலையில் ஏர் இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட விமானம் சார்லஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் சோதனையிடப்பட்டது. ரன்வேயில் ஓடும்போதே இந்த விமானத்தின் என்ஜினில் தீ பற்றி உடனடியாக அணைந்துவிட்டது.
இதையடுத்து அந்த விமான என்ஜினில் இருந்து சில பாகங்கள் சிதறி ரன்வே முழுக்க விழுந்தன. இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டுவிட்டது.
இது ஏர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் முன் நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து தங்களிடம் போயிங் நிறுவனமும், என்ஜினைத் தயாரித்த ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனமும் கடந்த சனிக்கிழமை தகவல் தந்ததாகவும், தங்களது நிபுணர்கள் அந்த விமானத்தை சோதனையிட்டு வருவதாகவும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது.
அடுத்த சில நாட்களில் இந்த என்ஜின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி நகரில் உள்ள ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரித்துப் பார்த்து சோதனையிடப்படும் என்று அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது.