காவிரியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு தடை
மதுரை: காவிரியில் 5 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான ஈரோடு வெட்டுக்காட்டுவலசை சேர்ந்த மகேந்திரகுமார், காவிரி, கொள்ளிடம், அமராவதி, பவானி ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரி பொதுநலன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக மேலும் சிலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
திருச்சி, கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் 2003-ம் ஆண்டில் இருந்தே பல குவாரிகள் இயங்கி வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் மணல் குவாரிகள் குறித்த புள்ளி விவரம், அது போன்று நடத்தப்படும் குவாரிகளில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மணல் விவரம், மணல் உற்பத்தியாகும் விவரம் போன்ற புள்ளி விவரங்கள் அரசால் தெரிவிக்கப்படவில்லை. அதே போன்று குவாரி நடத்த ஆட்சியர் அளித்துள்ள அனுமதி உத்தரவில் எவ்வளவு மணல் எடுக்கப்பட வேண்டும் என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே 5 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் உத்தமர்சீலி, கீழ அன்பில், முசிறி, திரியிங்கோமலை, கரூர் மாவட்டத்தில் வாங்கல், நெரு, சித்தலவாடி, திம்மச்சிபுரம், வதியம், தஞ்சாவூர் மாவட்டத்தில் விளாங்குடி, பழமானேரி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாதிரிவேலூர், சித்தமல்லி-1 ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 15 குவாரிகளை உடனடியாக மூட வேண்டும்.
மணல் எடுக்கப்பட உள்ள இடங்களை சுட்டிக்காட்டும் வகையில் அந்த இடங்களை சுற்றி சிவப்பு கொடிகள் நாட்டப்பட வேண்டும். மணலை ஆற்று பகுதியில் இருந்து லாரிகளில் ஏற்றி செல்ல கிராவல் போன்றவற்றால் சாலை அமைக்கக்கூடாது. இதற்காக மக்கும் பொருளான கரும்புக் கழிவுகளை பயன்படுத்த வேண்டும்.
உதவி ஆட்சியர் அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரியை கொண்டு அவ்வப்போது குவாரியை ஆய்வு செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரி நடத்த அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடம் மனு அளித்தால் அந்த மனுவை ஆணையம் 2 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications