ஹசாரேவின் அறிவிப்பு பதவி ஆசையை வெளிப்படுத்துகிறது: ஜி.கே.வாசன்
சென்னை: அரசியலில் ஈடுபடப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்திருப்பது அவரது பதவி ஆசையைத் தான் வெளிப்படுத்துகிறது என்று மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், எந்தவொரு தனி நபருக்கும் ஜனநாயகத்தை நிர்பந்திக்கவோ, நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை.
ஹசாரே குழுவினர் ஆட்சி மற்றும் அதிகாரத்தைப் பிடிக்கவே போராட்டம் நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி துவக்கத்தில் இருந்தே கூறி வந்தது. அது தற்போது உண்மையாகி உள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி துவங்கலாம், ஆதலால், அன்னா குழுவினர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து நாங்கள் எந்த கவலையும் கொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கூறியதைப்போல, அன்னா ஹசாரே குழுவினருக்கு அரசியல் ஆர்வமும், பதவி ஆசையும் இருக்கிறது என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
சென்னை எண்ணூர் துறைமுகம் இணைப்புச் சாலை பணிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிவடையும். தமிழகத்தில் மெரீனா, மகாபலிபுரம், ராமேஸ்வரம், முட்டம் உள்பட நாடு முழுவதும் 13 களங்கரை விளக்கங்கள் அருங்காட்சியங்களாக மாற்றப்படும் என்றார் வாசன்.
அக்னிவேஷ் எதிர்ப்பு:
இந் நிலையில் அரசியலில் ஈடுபட உள்ளதாக ஹசாரே குழு அறிவித்திருப்பது தனக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று அந்தக் குழுவைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், எந்தவொரு புது மாற்றத்தை வேண்டி போராட்டம் நடத்தப்படும் போது, உண்ணாவிரதமே இறுதி தீர்வாக இருக்குமே, தவிர மற்றவை ஏதும் இருக்க முடியாது. உண்ணாவிரதத்தை நிறைவு செய்வதாக அன்னா குழு கூறியிருக்கும் தினத்தை, நான் கருப்பு தினமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications