யுஎஸ் துப்பாக்கிச் சூடு: குருத்வாராவை காக்க தீரமுடன் போராடி உயிர்நீத்த சத்வந்த் சிங் கலேகா
அமெரிக்காவின் விஸ்கான்சின் குருத்வாராவில் இனவெறியோடு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் சத்வந்த்சிங் கலேகா உள்ளிட்ட 6 பேர் பலியாகினர். சம்பவத்தின் போது லாபியில் இருந்த சத்வத்சிங், கொலையாளியின் கண்மூடித் தனமான துப்பாக்கிச் சூட்டை தடுத்து நிறுத்த போராடியிருக்கிறார். அவரது போராட்டத்தின் மூலம்தான் கொலையாளியின் காட்டுமிராண்டித்தனம் சற்று குறைந்துபோனது. இதனால் மேலும் பல உயிர்கள் பறிபோவது தடுக்கப்பட்டிருக்கிறது.
கொலையாளியுடன் போராடிய சத்வந்த்சிங் உடலில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் வீழ்ந்து கிடக்க அவரது டர்பனும் அந்த ரத்தவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது.
அமெரிக்காவில் வர்த்தகராக வளர்ந்த சத்வந்த்சிங், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த குருத்வாராவை நிர்மாணிப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். இவரே குருத்வாராவை நிர்மாணிக்கும் குழுவின் தலைவராகவும் இருந்து வந்தார்.
நியூயார்க் நகரில் மட்டும் சுமார் 1 லட்சம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான தாக்குதலுக்குப் பிறகு சீக்கியர்களை இஸ்லாமியர்களாகக் கருதி தாக்கும் இனவெறிப் போக்கு அமெரிக்காவில் அதிகரித்து உள்ளது. ஒசாமா பின்லேடனின் டர்பனுக்கும் சீக்கியர்களின் டர்பனுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளாதவர்களாக, சீக்கியர்களைத் தாக்குவதை அமெரிக்க இனவெறியர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.