மேகாலயாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 31 பேர் பலி, 27 பேர் காயம்
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் இருந்து பேருந்து ஒன்று திரிபுரா தலைநகர் அகர்தலாவுக்கு புறப்பட்டது. அந்த பேருந்து மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள கிழக்கு ஜெயிந்தியா மலைப்பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் பேருந்தை திருப்ப முயன்றபோது அது கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து உருண்டு 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்து ஓட்டுநர் உள்பட 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறி்த்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிர் இழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 31க அதிகரித்தது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து திரிபுரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மாணிக் டே கூறுகையில்,
இந்த இடத்தில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த இடத்தி்ல் நடக்கும் விபத்துகளில் சிக்கி பலர் பலியாகின்றனர். சம்பவ இடத்திற்கு மாநில அரசின் குழு விரைந்துள்ளது என்றார்.