ஆம்புலன்ஸில் படுத்துக் கொண்டே நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட நபர்
நெல்லை: நெல்லையில் கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர் விபத்தில் சிக்கி காயமடைந்ததால் ஆம்புலன்சில் வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார். படுக்கையில் இருந்தவரிடம் அதிகாரிகள் நேர்முகத் தேர்வு நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் 39 கால்நடை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்காக 8ம் வகுப்பு வரை படித்தவர்களின் பட்டியல் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்டது. ஒரு பணிக்கு 5 பேர் என 195 பேருக்கு நேர்முகத் தேர்விற்கான கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு நெல்லை மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் நடராஜன், உதவி திட்ட அலுவலர் மணி, துணை இயக்குனர்கள் சங்கரசுப்பிரமணியன், ராமநாதன்,
உதவி இயக்குனர்கள் மணி, ஜெபராஜ், ஹம்சா முகைதீன் ஆகியோர் அடங்கிய குழு நேர்முகத் தேர்வு நடத்தியது.
பாளையங்கோட்டை வாயில்லா நாயனர் தெருவைச் சேர்ந்த விக்டர் சாமுவேல் என்பவருக்கும் நேர்முகத் தேர்விற்கான கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த பைக் விபத்தில் விக்டர் சாமுவேலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரால் எழுந்து நடக்க முடியவில்லை.
இதனால் உறவினர்கள் அவரை ஆம்புலன்சில் வைத்து நேர்முகத் தேர்வுக்கு அழைத்து வந்தனர். இது குறித்து விபரம் இணை இயக்குனர் நடராஜனிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சிற்கு வந்து நேர்முகத் தேர்வை நடத்தினர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு விக்டர் சாமுவேல் படுக்கையில் இருந்தவாறே பதில் அளித்தார்.
இது குறித்து விக்டர் சாமுவேல் கூறுகையில்,
அரசு வேலை கிடைப்பதே அரிது. இந்த வயதில் நேர்முகத் தேர்விற்கு அழைப்புக் கடிதம் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனினும் விபத்தில் பாதிக்கப்பட்ட நான் எப்படி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்ற ஐயம் ஏற்பட்டது. வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதால் உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் வந்து கலந்து கொண்டேன் என்றார்.