நவீன கருவிகள் மூலம் மதுரை கிரானைட் குவாரிகளை சர்வே செய்ய திட்டம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை டேப் மூலம் அளந்ததில் முரண்பாடுகள் இருந்ததை அடுத்து நவீன கருவி மூலம் மீண்டும் அளக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு மற்றும் சுற்றுப்பகுதியில் ஏராளமான கிரானைட் குவாரிகள் உள்ளன. இந்த கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால் ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார்.
இதனை அடுத்து தற்போதைய ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா கிரானைட் குவாரிகளில் அரசு விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளனவா, முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதை கண்டறிய 18 பேர் கொண்ட குழுக்களை அமைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த குழுவினர் கடந்த 2-ந் தேதி முதல் மேலூர் பகுதியில் உள்ள அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த 2-ந் தேதி முதல் நடைபெற்ற நில அளவை பணிகள் சாதாரண டேப் மூலம் அளக்கப்பட்டன. இந்த அளவீடுகள் முன்னுக்குப்பின் இருப்பதாக கூறி, மிகவும் துல்லியமாக அளக்க ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டார்.
அதனை அடுத்து "டோட்டல் ஸ்டேஷன்'' என்ற நவீன கருவி சென்னையில் இருந்து மேலூர் கொண்டு வரப்பட்டது. இந்த கருவியை கையாள புவியியல் துறை நிபுணர்கள் 9 பேர் வந்துள்ளனர். அவர்கள் அந்த கருவியின் மீண்டும் அனைத்து குவாரிகளையும் அளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கீழையூர் சிசி குளத்தில் உள்ள கிரானைட் குவாரியை ஏற்கனவே பலமுறை அளந்திருந்தார்கள். இருப்பினும் செவ்வாய்கிழமையன்று டோட்டல் ஸ்டேஷன் கருவி மூலம் மறுபடியும் அளக்கப்பட்டது.
அதேபோல் இ.மலம்பட்டி, ரெங்கசாமி ஆகிய இடங்களில் உள்ள கிரானைட் குவாரிகளிலும் துணை தாசில்தார் ரவீந்திரன் தலைமையில் நவீன கருவி மூலம் மீண்டும் அளக்கப்பட்டது. மற்ற குவாரிகளும் இந்த கருவி மூலம் தொடர்ந்து அளக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் உசிலம்பட்டி பகுதியில் உள்ள குவாரிகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இங்கு எரவார்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், உத்தப்பநாயக்கனூர் ஆகிய ஊர்களில் 7 இடங்களில் கிரானைட் குவாரிகள் உள்ளன.
இந்த குவாரிகளை செவ்வாய்கிழமையன்று அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். உத்தப்பநாயக்கனூரில் உள்ள நாகராஜ் என்பவருக்கு சொந்தமான குவாரியை அதிகாரிகள் அளவீடு செய்து ஆய்வு செய்தனர். அதேபோல் எரவார்பட்டியில் உள்ள ஒரு பி.ஆர்.பி.குவாரியில் ஆய்வு செய்தபோது அங்கு 18 மீட்டர் நீளத்திற்கு புறம்போக்கு நிலத்தில் ஷெட் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஷெட்டை அகற்றுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.