டெசோ மாநாடுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு

டெசோ மாநாடுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மனு நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, மாநாட்டுக்கு 2500 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே 8000க்கும் குறைவானவர்களே வருவார்கள் என்று டெசோ மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவரான ஜெ. அன்பழகன் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் மாநாடு நடத்துவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று உளவுத் துறை தகவல் அளித்துள்ளதாகவும், பயங்கரவாத தாக்குதல் ஏதேனும் நடத்தப்படலாம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், டெசோ மாநாட்டுக்கு 8000க்கும் மேற்பட்டவர்கள் வந்தால் என்ன செய்வீர்கள்? மாநாட்டுக்கு வருபவர்களின் பாதுகாப்புக்கு டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? டெசோ மாநாட்டுக்கு அனுமதி கோரியவர் ஒருவர்? தற்போது வழக்குத் தொடர்ந்திருப்பவர் வேறொருவரா? இதில் யார் பொறுப்பேற்பது? ஒரு வேளை சில நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்தால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா? என கேள்விகளை எழுப்பினார்.
மேலும், டெசோ மாநாட்டுக்கு வருபவர்களின் பாதுகாப்பு நாங்கள் பொறுப்பு என்று எழுதிக் கொடுத்தால் காவல்துறை அனுமதி அளிக்குமா எனவும் அரசிடம் கேட்டார்.
பிறகு, டெசோ மாநாடு குறித்த முக்கிய வழக்கு டிவிஷன் பெஞ்ச் முன்பு இருப்பதால் இந்த வழக்கை தாம் விசாரிப்பது சரியாக இருக்காது. இந்த வழக்கு ஆவணங்களையும் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறி வழக்கு விசாரிக்க மறுப்புத் தெரிவித்து விட்டார்.












Click it and Unblock the Notifications