மழை வேண்டி கருப்பசாமிக்கு கிடாவெட்டி சிறப்பு பூஜை செய்த மக்கள்
நெல்லை: புளியங்குடியில் மழை வேண்டி கோவிலில் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி நகராட்சி பகுதியில் இரண்டு கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் 5 குடிநீர் கிணறுகள் இருந்தும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வாடிக்கையாகிவிட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவு கோடை காலம் முடிந்த பின்னரும் கடந்த இரண்டு மாதங்களாக புளியங்குடியில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.
இதனால் பொதுமக்கள் கவுன்சிலர்கள் தலைமையில் சாலை மறியல் மற்றும் நகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தங்களது பாதிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நகராட்சி துணை தலைவர் பரமேஸ்வர பாண்டியன் தலைமையில் புளியங்குடி பகுதிக்கு குடிநீர் பெறக்கூடிய கோட்டமலை ஆற்றுப்படுக்கையில் உள்ள கருப்பசாமி கோவிலில் கிடா வெட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு படையல் போடப்பட்டது.
தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அனைவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். இதில் திருப்பதி, பாலசுப்பிரமணியன், சந்திரா, ராமலெட்சுமி, வெள்ளத்துரைச்சி, கணேசன், கனகவல்லி, செல்வி மற்றும் 12க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோவிலுக்கு வந்த பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது.