தேசிய லெவலுக்கு போன விஜய்.. சர்ப்ரைஸுடன் வரும் ராகுல்.. அரசியல் ஆட்டம் இப்பதான் சூடு பிடிச்சிருக்கு
சென்னை: காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையிலான புதிய உறவு, தமிழக அரசியலில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. விஜய்யின் எழுச்சியை உன்னிப்பாகக் கவனிக்கும் ராகுல் காந்தி, தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி விஜய்க்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்த "ராகுல் - விஜய்" காம்போ, வரும் காலங்களில் தமிழகத்தின் அதிகார மையத்தை தீர்மானிப்பதுடன் தேசிய அரசியலிலும் ஒரு புதிய அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு வரலாற்று மாற்றத்தை மாநில அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலேயே பெரும் கவனம் ஈர்த்துள்ளன. தவெக தலைவர் விஜய், தனது முதல் தேர்தலிலேயே ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியிருப்பது டெல்லி அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

தவெக - காங்கிரஸ்
இந்த சூழலில், தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவுடன் கைகோர்த்திருந்த காங்கிரஸ், இப்போது விஜய்யை நோக்கித் தன் கரங்களை நீட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் மாநிலத் தலைமைக்கு ராகுல் காந்தி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் கசிகின்றன. "திமுகவை நம்பி நின்றதால் பெரிய வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம், தவெகவுடன் இணைந்திருந்தால் பல இடங்களை வென்று அதிகாரத்தில் பங்கு பெற்றிருக்கலாம்" என ராகுல் கருதுவதாகவும், அந்த அதிருப்தியே தற்போது அரசியல் முடிவாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கமிட்டி ஆதரவு
இதன் தொடர்ச்சியாக, விஜய்யின் தவெக அரசுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிபந்தனையுடன் கூடிய முழு ஆதரவை அறிவித்துள்ளது... மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், விஜய்யின் கொள்கைகள் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீட்டெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்துவது மற்றும் வகுப்புவாத சக்திகளைத் தள்ளி வைப்பது என்ற காங்கிரஸின் நிபந்தனையை விஜய் ஏற்றுக்கொண்டது போன்றவைதான், இந்த கூட்டணியை சாத்தியமாக்கியுள்ளதாக தெரிகிறது.
ராகுல் காந்தி - விஜய் காம்போ
உண்மையிலேயே, ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் இடையிலான நட்பு கள்ளக்குறிச்சி சம்பவம் போன்ற இக்கட்டான நேரங்களில் ராகுல் காந்தி நேரடியாக விஜய்யிடம் பேசியதில் இருந்தே வலுப்பெறத் தொடங்கியது. அதுமட்டுமல்ல, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "விஜய்யின் இந்த வெற்றி, இளைஞர்களின் எழுச்சிமிக்க குரல்" எனக் குறிப்பிட்டது, தவெகவை காங்கிரஸ் ஒரு முக்கிய சக்தியாக பார்ப்பதையே காட்டுகிறது.
இந்த கூட்டணி தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலும் காங்கிரஸுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தக்கூடும். விஜய்யுடன் இணைவதன் மூலம் தென்னிந்தியாவில் தனது செல்வாக்கை வலுப்படுத்தவும், வரும் மக்களவைத் தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பெறவும் காங்கிரஸ் திட்டமிடுகிறது.
டெல்லிக்கு விஜய் வலை
அதேபோல், ராகுல் - விஜய் என்ற இந்த இளம் தலைமுறை கூட்டணி, தேர்தல் களத்தில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றம் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் விஜய் இப்போது வெறும் தமிழ்நாட்டு தலைவராக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ராகுல் காந்தியின் ஆதரவுடன் தேசிய அரசியலிலும் ஒரு முக்கியப் புள்ளியாக அவர் உருவெடுத்துள்ளதாகவே தெரிகிறது. விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு ராகுல் காந்தி வருகை தருவது உறுதியானால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும்... தமிழகத்தில் உருவாகும் இந்த மாற்றம், வரும் காலங்களில் தேசிய அரசியலின் போக்கையும் தீர்மானிக்கும் ஒரு காரணியாக இருக்கலாம்.












Click it and Unblock the Notifications