தமிழக அரசு தொழிற்சங்கங்களை மதிப்பதில்லை: சிஐடியூ மாநில தலைவர் குற்றச்சாட்டு
நெல்லை: தமிழக அரசு தொழிற்சங்கங்களை மதிப்பதில்லை என்று நெல்லையில் நடந்த மருந்து விற்பனை பிரதிநிதிகள் மாநில மாநாட்டில் சிஐடியூ மாநில தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தி்ன் 3 நாள் மாநில மாநாடு பாளையங்கோட்டையில் துவங்கியது. வரவேற்பு குழு தலைவர் முத்துகுமாரசாமி வரவேற்றார்.
சிஐடியூ மாநில தலைவர் சிங்காரவேலு மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது,
ஒலிம்பிக்கில் சீனா 87 பதக்கங்களை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா 6 பதக்கங்களை மட்டுமே வாங்கியுள்ளது. 1949ம் ஆண்டு மாவோ தலைமையில் சீனா விடுதலை அடைந்தபோது அது பின்தங்கிய நாடாகவே இருந்தது. ஆனால் இன்று வியத்தகு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இந்தியாவில் 1991ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொள்கைக்கு பின்னர் சமத்துவமின்மை நிலவுகிறது. முதலாளித்துவத்தை மாற்றியமைக்க சிஐடியூ சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்தியாவில் இன்று 50 சதவீத மக்களுக்கு மட்டுமே கழிவறைகள் உள்ளன. சுகாதார வசதிகளைக் கூட முறையாக அரசுகளால் செய்து கொடுக்க முடியவில்லை. தமிழகத்தில் கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ரூ.35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்து முறைமைப்படு்த்தியிருந்தால் பஸ் கட்டணத்தை, பால் கட்டணத்தை ஏற்றியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
தமிழகத்தில் முறைசாரா தொழிலாளர் வாரியம் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வருகிறது. விஏஓ கையெழுத்து, 55 லட்சம் தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு திறப்பு என முடியாதவற்றை உடனே செயல்படுத்த அரசு வற்புறுத்துகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்தச் செல்லும் தொழிற்சங்கங்களையும் அரசு மதிப்பதில்லை என்றார்.